SEBI செய்ய வேண்டியதென்ன? பாகம் 1
February 18, 2015 Leave a comment
2014, டிசம்பர் 1-இலிருந்து அமலுக்கு வந்துள்ள புதிய விதியின் படி செபியிடம் பதிவு பெற்ற அனாலிஸ்ட்கள் மட்டுமே பங்குகளைப் பற்றி வாங்க, விற்க ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். இது மிகவும் நல்லதுதான். இதை விட செபி கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமொன்று இருக்கின்றது. அதுதான் இன்சைடர் டிரேடிங் – அதுதாங்க “உள்குத்து வேலை” என்று நாம் செல்லமாகச் சொல்வது.
கடந்த 2014 இறுதியில் நடந்த இரண்டு பங்குகளின் விலை ஏற்ற, இறக்கங்கள் நமது இந்தியச் சந்தையிலும் இந்த மாதிரி இன்ஸைடர் டிரேடிங் இருக்கின்றனவா என்ற சந்தேகங்களை முதலீட்டாளர்களின் மனதில் எழுப்பியுள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
டெக் மஹிந்த்ரா (TECHMAHINDRA)
கடந்த 2014, நவம்பர் 20-ஆந் தேதியன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு (பங்குச்சந்தை அலுவல்கள் முடிவடைந்த பின்னர்), பிரஸ் மீட் வைக்கப்போவதாக டெக் மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்தது. கீழேயிருக்கும் ட்விட்டர் தகவலில் இதனை சிஎன்பிசி டிவி18-இன் தொகுப்பாளர் சோனியா ஷெனாய் தெரிவித்திருந்தார். (இது 20/11/2014 3:34PM-இல் ட்வீட் செய்யப்பட்டுள்ளது)
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சாதாரண மக்களாகிய நமக்கும், பிரஸ் மற்றும் மீடியாவிற்கும், 20/11/2014 மாலை 4 மணிக்கப்புறம்தான் டெக்மஹிந்த்ரா நிறுவனம் என்ன சொல்லப்போகிறதென்று தெரியவரும். இது ஒன்றும் பெரிய விஷயமேயில்லைதானே?
ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக, 2014 நவம்பர் 19-ஆந்தேதியன்று அப்பங்கின் விலையில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். நவ. 18 அன்று 2596.75-இல் முடிவடைந்த பங்கு, அடுத்தநாள் நவ. 19 அன்று 2627.25 என்ற விலையில் வர்த்தகமாகத் தொடங்கியது. இங்கே முக்கியமாக பங்கின் விலையினைப் பார்க்காமல், ஆப்ஷன் மார்க்கெட்டில் டெக்மஹிந்த்ரா நவம்பர் சீரிஸ் 2700 கால் ஆப்ஷன் சார்ட்டை கவனிக்கலாம். (கீழேயிருப்பது ஹவர்லி சார்ட்)
19/11 – ஓபன் 12. 50 அன்றைய லோ: 7.95
அதுவும் அன்றைய தேதியில் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாக இந்தக் கால் ஆப்ஷனின் ஓபன் இண்டரெஸ்ட் (OI) உயர்ந்து, விலையும் மேலே ஏறியுள்ளதைப் பார்க்கலாம். (படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது)
20/11 – க்ளோஸ்: 51.40 அன்றைய ஹை: 61.00
ஆக இந்த இரண்டு நாட்களில் குறைந்த பட்ச விளையான 7.95-லிருந்து அடுத்த நாள் அதிக பட்சமாக 61.00 வரை சென்றதில், 20-ஆந்தேதி முக்கியமான அறிவிப்பு வரப்போகிறதென்று முன்னரேயே தெரிந்தவர்களுக்கு மட்டுமே முக்கியமான தொடர்பிருக்கலாம் அல்லவா? 20-ஆந்தேதி மாலை 4 மணிக்கு பிரஸ் மீட் இருக்கிறதென்று 20/11 அன்றுதான் கம்பெனியும் மீடியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் 19-ஆந்தேதியே ஓபன் இண்டரெஸ்ட் உயர்ந்து, 2700 கால் ஆப்ஷன் விலையும் உயர்ந்ததை செபி கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்.
அஹ்மத்நகர் ஃபோர்ஜிங்க்ஸ் (AHMEDFORGE)
இது ஒருபக்கமிருக்க, ரிலையன்ஸ் போன்று, சந்தை முடிந்த பின்னர்தான் தங்களது நிதிநிலை அறிக்கையினை வெளியிடும் வழக்கம் பல நிறுவனங்களுக்கு உண்டு. 2014, நவம்பர் 24 அன்று அஹ்மத்நகர் ஃபோர்ஜிங்க்ஸ் (AHMEDFORGE) நிறுவனமும் சந்தை முடிந்த பின்னர் தனது நிதிநிலை அறிக்கையை அறிவிப்பதாய் செய்தி வெளியானது. ஆனால், 24-ஆந்தேதியன்றே அந்தப் பங்கின் விலை 8.7% குறைந்து 452.45 என்ற அளவிலே முடிந்தது. அன்றைய நிதிநிலை அறிக்கையும் மார்க்கெட் முடிந்த பின்னர்தான் வெளியிடப்பட்டது. அதுவும் மோசமாக இருந்த காரணத்தால், அடுத்த நாளிலிருந்து மேலும் விலை கீழேயிறங்கத் தொடங்கி (19/12/2014 நிலவரப்படி) 353.55 என்று வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றது.
சில்லறை வர்த்தகர்களாகிய நமக்கு இதிலேயிருக்கும் பாதகமான விஷயமென்ன? 2014, நவ. 24-இல் சந்தை நடந்துகொண்டிருக்கும்போதே ஏற்பட்ட விலைச்சரிவிற்கு என்ன/யார் காரணம்? கண்டிப்பாகச் சில்லறை வர்த்தகர்களால் அந்த அளவிற்கு விலையினைக் கீழே கொண்டு வரமுடியாது. மார்க்கெட் முடிந்தபின்னர் வரவிருக்கும் மோசமான நிதிநிலையறிக்கையினைப் பற்றி நன்கு தெரிய வந்தவர்களால் மட்டுமே மார்க்கெட் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த நிறுவனப் பங்குகளை விற்று, வெளியேற அதிக வாய்ப்புகள் உண்டு.
இன்ஸைடர் டிரேடிங் என்பது பங்குகளை வாங்கி அல்லது விற்று இலாபம் சம்பாதிப்பது மட்டுமல்ல. டெக்மஹிந்த்ரா2700 கால் ஆப்ஷன் போன்று ஆப்ஷன் மார்க்கெட்டிலும் இலாபம் சம்பாதித்துப் போய்க்கொண்டேயிருக்கலாம்.
அது சரி! இந்த உள்குத்து வேலைகளை யார் செய்திருக்கலாம்? நிறுவன அதிபர்களோ, மேலிருந்து கீழ் வரை உள்ள நிறுவன ஊழியர்களோ, அவர் தம் உறவினர்களோ, நண்பர்களோ, அல்லது நிறுவனம் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் தணிக்கை நிறுவனம் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றைத்தான் செபி அதிக கவனம் செலுத்தி, விசாரணைகள் நடத்தி, தவறுதல் செய்யும் நிறுவனகளின் மீதும் நிறுவன அதிபர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்து தகுந்த தண்டனை வழங்கினால்தான் சில்லறை வர்த்தகர்களின் நம்பகத்தன்மையைப் பெறமுடியும். இவை போன்று மேலும் நடக்காமலும் தடுக்க முடியும்.
செய்யுமா செபி?